News Just In

6/13/2024 06:06:00 AM

தடையுத்தரவு நீக்கப்பட்டமையினால் ஆங்கில ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு வேண்டுகோள்!



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து எச்என்டிஈ (உயர் தேசிய டிப்ளோமா ஆங்கிலக் கல்வி) ஆங்கில ஆசிரியர் நியமனத்தை உடனடியாக வழங்குமாறு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு பரீட்சைக்குத் தோற்றிய சுமார் 300 பேர் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எச்என்டிஈ ஆங்கில ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

கடந்த வருடம் ஜுலை 25 மற்றும் 26ஆம் திகதிகளில் ஆங்கில ஆசிரியர் நியமன நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியோர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இந்நியமனத்திற்காக விண்ணப்பதாரிகள்; எழுத்துப் பரீட்சை, நேர்முக பரீட்சை, செயல் முறைப் பரீட்சை என்பவற்றை முடித்துவிட்டு சுமார் 04 வருடங்களாக நியமனத்திற்காக காத்திருக்கிறார்கள்.

ஆங்கில ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முதல்தடவையாக 27.02.2021 அன்று நடத்தப்பட்டது. பின்னர் அதில் குளறுபடிகள் நடந்ததாக தெரிவிக்கப்;பட்டதன் அடிப்படையில் அப்பரீட்சை மீண்டும் 30.10.2021 இல் நடத்தப்பட்டது.

போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு சுமார் 2 வருடங்கள் கழிந்த நிலையில் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியோருக்கான நேர்முகத் தேர்வு கடந்த 2023இல் நடத்தப்பட்டது.

இதேவேளை இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி ஆசிரியர் நியமனத்துக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் 35 வயதைக் கடக்கும் பட்சத்தில் அவர் நியமனத்தைப் பெறமுடியாத நிலைமை உள்ளது.

மேலும், இந்த ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்த்துக் காலங் கழிக்கும் பல பரீட்சார்த்திகள் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடிகளுக்கும் குடும்பச் சுமைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். அத்தோடு மன உளைச்சலும் அவர்களைப் பாதித்துள்ளது.

இந்த நேர்முகப் பரீட்சைக்கு 230 பேர் தமிழ் மொழி மூலமும் 71 பேர் சிங்கள மொழி மூலமும் தோற்றியிருந்தனர்.

இந்த நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் வழங்கப்பட்டிருந்த நியமனத்திற்கு எதிரான தடையுத்தரவு கடந்த 06.06.2024 அன்று கல்முனை மாகாண நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு விட்டது.

எனவே, நியமனத்திற்காக கிழக்கு மாகாணத்தில் கடந்த 4 வருடங்களாகக் காத்திருக்கும் பரீட்சைக்குத் தோற்றியோருக்கு தகுதியின் அடிப்படையில் உடனடியாக நியமனம் வழங்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: