
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் கதிர்காம பாத யாத்திரை காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் ஏற்பட்டமையை கண்டித்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.
எதிர்வரும் 30ஆம் திகதி லாகுகல பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள உகந்தை காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறக்கப்பட்டு, ஜூலை 11ஆம் திகதி மூடப்படுவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கடந்த ஜீன் மாதம் 07ஆம் திகதி அன்று உகந்தை முருகன் ஆலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, கதிர்காமம் ஆலயத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் உகந்தை காட்டுப்பாதை திறக்கும் திகதி பிற்போடப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டு, 14ஆம் திகதி மூடப்படவுள்ளதாக மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் ரத்னாயக்க அறிவித்திருக்கிறார்.
கதிர்காம காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் ஏற்பட்டமையை கண்டித்தும் குறித்த தீர்மானத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை போராட்டக்காரர்கள் வழங்கினர்.
No comments: