News Just In

12/28/2023 07:42:00 PM

மட்டக்களப்பில் கடும் மழை: நவகிரி குளத்தின் வான்கதவுகள் திறப்பு!





மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நவகிரி குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இன்றைய தினம் (28.12.2023) கடும் மழை பதிவாகியுள்ள நிலையில், அந்த மாவட்டத்தின் தாழ்நிலங்கள் உட்பட பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இருதயபுரம், ஜெயந்திபுரம், கூழாவடி, மாமாங்கம், உப்போடை, ஊறணி உட்பட பல பகுதிகளில் உள்ள தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வீதிகளும் வெள்ளத்தில் நிரம்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களில் ஒன்றான நவகிரி குளத்தின் நீர்மட்டம், வான்பாயும் நிலைமை காரணமாக, குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஐந்து அடி வரை திறக்கப்பட்டுள்ளன.

இதனால், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், வாவி மற்றும் நவகிரி ஆற்றுப்படுக்கையினை அண்டியுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு போரதீவுப்பற்று பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் மினிசூறாவளி காரணமாக சேதமடைந்த வீடுகளை, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன், நேரில் சென்று பார்வையிட்டதுடன் சேத நிலைமைகள் தொடர்பிலும் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளார்.

No comments: