News Just In

9/26/2023 08:08:00 AM

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை முகநூலில் விமர்சிப்பவர்கள் 4ஆம் மாடிக்கு அழைப்பு!

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை முகநூலில் விமர்சிப்பவர்கள் 4ஆம் மாடிக்கு  அழைக்கப்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பாக முகநூலில் பதிவிட்ட சிலர் நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

மக்களை அடக்குவதற்கும் மக்களை கட்டுப்படுத்துவதற்குமாகவே அரசாங்கம் தற்போது புதிய சட்டமூலங்களை கொண்டு வர முயல்கின்றது.

தற்போது கொண்டு வர உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலமாக நாட்டின் ஜனநாயகத்தையும் கருத்து சுதந்திரத்தையும் இல்லாது ஒழிக்கும் செயற்பாடு இடம்பெறுவதாகவே நான் பார்க்கின்றேன்.

இலங்கையில் இடம்பெற்ற கொலை மற்றும் கொலை குற்றச்சாட்டுகளுடன் சந்திரகாந்தனுக்கு தொடர்பு இருக்கின்றது என்பதை சனல் 4 வெளியிட்டுள்ளது.

அந்த சனல் 4வின் கருத்தை தங்களது முகநூல்களில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு 4ஆம் மாடி விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.

சனல் 4வில் வெளிவந்த காணொளியை போட்டவர்களுக்கே நான்காம் மாடி விசாரணை என்றால் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் கொண்டு வரப் போகின்ற புதிய சட்டமூலங்கள் மக்களது பிரச்சினைகளை, ஆதங்கங்களை வெளிப்படுத்த முயல்கின்றபோது அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமானது இந்த சட்டங்களை வைத்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களையோ போராடுபவர்களையோ அடக்க முயல்கின்றார்கள் என்றுதான் நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: