
குருந்தூர் மலையில் இருந்து எம்மை வெளியேற்றிய முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் அவருக்கு இல்லை.
அத்துடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நீதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுகிறார்கள்.
ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) இடம்பெற்ற வானூர்திமூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் -இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேசிய நல்லிணக்கத்துக்கும்,தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
இலங்கை சிங்கள பௌத்த நாடு.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2000 வருடகால பழமையான தொல்பொருள் மரபுரிமைகள் பரவலாக காணப்படுகின்றன.குருந்தூர் மலையில் பௌத்த மரபுரிமைகள் உள்ளன.
குருந்தூர் மலைக்கு நாங்கள் அண்மையில் சென்றிருந்த போது அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாங்கள் விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாக குறிப்பிட்டு எம்மை வெளியேறுமாறு குறிப்பிட்டார்.
அத்துடன் குருந்தூர் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட வருகை தந்த பௌத்த தேரரையும் வெளியேறுமாறு குறிப்பிட்டார். நீதிபதியின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
No comments: