News Just In

1/31/2023 12:13:00 PM

13இற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய விமல் மற்றும் சரத் வீரசேகர: ரணில் வழங்கிய பதிலடி





அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக் கூடாது என போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்த திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும், அதைவிடுத்து 13ஆவது திருத்தம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என பதறியடிப்பது வெட்கக்கேடானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.


இதற்கமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைப் பயன்படுத்தி 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று கடந்த வாரம் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக தெற்கில் உள்ள கடும்போக்குவாத அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த விமர்சனங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், "அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தால் நாட்டுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு ஒருபோதும் பிளவுபடாது.

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கட்டாயம் அதனை வாசிக்க வேண்டும்.

அதைவிடுத்து இந்தச் திருத்தச் சட்டம் முழுமை பெற்றால் நாடு பிளவுபடும் என்று பதறியடிப்பது வெட்கக்கேடானது.

மொட்டுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அல்லது இருவர் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடுவதால் ஒட்டுமொத்த மொட்டுக் கட்சியுமே 13இற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது என எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது.

13ஐ விமர்சிப்போர் தாராளமாக விமர்சிக்கட்டும். ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் என்னிடம் பதில்கள் உள்ளன" என தெரிவித்துள்ளார்.

No comments: