News Just In

10/02/2022 04:39:00 PM

திடீரென காலமான இலங்கையின் பிரபல நடிகர் தொடர்பில் வெளியான தகவல்!

திடீர் சுகயீனத்தினால் உயிரிழந்த இலங்கை நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று மாலை அவரது உடல் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை மாலை மாலை அவரது சொந்த ஊரான இறக்குவாணைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் அவரது சொந்த ஊரில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மலையகப் பிரதேசமான ரக்வானையில் பிறந்த தர்ஷன் தர்மராஜ் 2008ஆம் ஆண்டு ஏ9 (A9) எனும் சிங்களத் தொலைக்காட்சித் தொடர் நாடகத்தின் மூலமாக நடிப்புத் துறைக்குள் நுழைந்தார்.

திரைப்படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக பல்வேறு விருதுகளை வென்ற தர்ஷன், பலராலும் அவதானிக்கப்பட்ட 'பிரபாகரன்', 'சுனாமி' உட்பட 25க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு வெளியான 'பிரபாகரன்' எனும் இருமொழி (சிங்கம் மற்றும் தமிழ்) திரைப்படத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாகப் பாத்திரமேற்று தர்ஷன் நடித்திருந்தார்.

இதனையடுத்து பிரபாகரன் திரைப்படமும், தர்ஷனும் சில தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

அசோக ஹந்தகம இயக்கி 2012ஆம் ஆண்டு வெளியான 'இனி அவன்' (Ini Avan - Him, Here After) தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தமைக்காக தர்ஷனுக்கு சிறந்த நடிகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்திருந்தன.

இந்தத் திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் 'கான்' திரைப்பட விழாவில் (FESTIVAL DE CANNES), 2012ஆம் ஆண்டு பிரன்ச் மொழி உப தலைப்புக்களுடன் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏசியன் அமெரிகன் சர்வதேச திரைப்பட விழாவிலும் (Asian American International Film Festival) 'இனி அவன்' 2013ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இந்தத் திரைப்படத்தில் தர்ஷன் நடித்திருந்தார்.

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'கோமாளி கிங்ஸ்'-இல், 'மோகன்' எனும் கதைப் பாத்திரத்தில் தர்ஷன் நடித்திருந்தார்.

2018ஆம் ஆண்டு வெளியான 'கோ'மாளி கிங்ஸ்' முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக அமைந்திருந்தது. இறுதியாக இவர் 'ரெல்ல வெரல்லட் ஆதரே' மற்றும் 'கொலம்ப' ஆகிய சிங்களத் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் நடித்து வந்தார்.

No comments: