
(நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்)
அம்பாறை மாவட்ட மீனவர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் எதிர்கொள்ளும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினை தொடர்பிலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ள விடயம் தொடர்பிலுமான கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (15) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸின் பங்கெடுப்புடன் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மீனவர்கள் எதிர்நோக்கும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ள விடயங்களை கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திர படகு மீனவர் உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எம்.எச்.எம் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரிசுக்கு எடுத்துரைத்தார். இதற்கமைவாக கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட 05 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேடமாக வாரத்தில் 07 நாட்களும் டீசலினை வரவழைத்து அதனை மீனவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமைப்படுத்தி வழங்குவற்கு ஆலோசிக்கப்பட்டதுடன் இது சம்மந்தமாக பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி உடன் தீர்வு பெற்றுத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம். எம் ஹரீஸ் இதன்போது உறுதியளித்தார்.
இக் கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சிறிரஞ்சன், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments: