News Just In

8/29/2022 06:57:00 PM

ஹரீஸ் எம்.பியின் முயற்சியினால் வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!

மிக நீண்டகாலமாக பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வரும் வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வை காணும் நோக்கில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியினால் அம்பாறை அரசாங்க அதிபர் எஸ். டக்ளஸ் அவர்களுடனான சந்திப்பு இன்று அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

வட்டமடு விவசாயிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் ; வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைகளை ஆழமாக முன்வைத்ததுடன் அதற்கான தீர்வை அவசரமாக எடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதுடன், சமகாலத்தில் உள்ள நெருக்கடி நிலையில் விவசாயிகள் படும் கஷ்டநிலை, உரப்பிரச்சினைகள் உட்பட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

வட்டமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வைப்பெற வேண்டும் என்பதில் தான் உடன்பாட்டுடன் இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி துரிதகதியில் எடுப்பதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது உறுதியளித்தார்.

அத்துடன் இணைந்தாக மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்ட இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாவா, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் ஏ.ஜீ. எம். அன்வர் நௌசாத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நூருள் ஹுதா உமர்.

No comments: