News Just In

6/11/2022 10:14:00 PM

கோட்டாபயவை நம்பாத சிங்களவர்கள்! புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு! மனோ கணேசன்



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நம்ப சிங்களவர்களே இன்று தயாரில்லையே. அப்படி இருக்கும்போது தமிழர் எப்படி நம்புவது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு வருமானத்தில் பெரும் பகுதி, மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர்கள் அங்கு உழைத்து ஊருக்கு அனுப்பும் அமெரிக்க டொலர்கள்தான். இது இன்று வெகுவாகக் குறைந்துவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதியாளர்களும் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை இலங்கைக்கு வெளியேயே நிறுத்திவைத்துள்ளார்கள். ஏன்? இலங்கை அரசு மீது நம்பிக்கை இல்லை. இன்று ரணில் வந்து அதை மாற்றப் பார்க்கிறார்.

ஆனால், கோட்டாபய அரசு தலைவராக இருக்கும்வரை, தமது நிதியை இலங்கைக்கு வங்கிகள் மூலம் அனுப்ப, மத்திய கிழக்கில் பணிபுரியும் மற்றும் ஏற்றுமதி தொழில் செய்யும் பெரும்பாலான சிங்களவர்களே தயாரில்லை.

இந்நிலையில், புலம்பெயர்ந்த தமிழர்களை முதலீடு செய்ய அழைத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய.இந்த நெருக்கடிக்கு இடையே சிரிப்பு காட்டுகிறார். “ஜனாதிபதியே, நீங்க முதலில் வெளியே போங்க, நாங்க பணத்த உள்ளே கொண்டுவாறோம்” என நான் அவருக்கு சொல்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.



No comments: