News Just In

4/13/2022 06:06:00 AM

ரஷ்ய படைகள் சற்றும் எதிர்பாராத வகையில் போர்க்களத்தில் தமது நூற்றுக்கும் மேற்பட்ட டாங்கிகளை இழந்துள்ளன!

உக்ரைன் மீதான படையெடுப்பில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படைகள் சற்றும் எதிர்பாராத வகையில் போர்க்களத்தில் தமது நூற்றுக்கும் மேற்பட்ட டாங்கிகளை இழந்துள்ளன.

இவ்வாறு பெருமளவு டாங்கிகளை ரஷ்யா இழப்பதற்கு என்ன காரணம் என்பது தற்போது வெளியாகி உள்ளது.

இதன்படி மேற்கத்தய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய மேம்பட்ட டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் (anti-tank weapons) மற்றும் ரஷ்யா அதன் டாங்கிகளை மோசமாக பயன்படுத்தியதனால் மட்டுமே இந்த இழப்புகளுக்கு காரணம் என இராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யா 680-க்கும் மேற்பட்ட டாங்கிகளை இழந்துள்ளதாக உக்ரைனின் ஆயுதப்படைகள் கூறுகின்றன. இதற்கிடையில், போர்க்களத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ இழப்புகளை கணக்கிடும் இராணுவ மற்றும் உளவுத்துறை வலைப்பதிவான Oryx, ரஷ்யா 460-க்கும் மேற்பட்ட டாங்கிகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட பிற கவச வாகனங்களை இழந்துள்ளதாக கூறுகிறது.

ராண்ட் கோப்பரேஷன் (Rand Corporation) மற்றும் ஐஐஎஸ்எஸ் (International Institute for Strategic Studies) படி, போரின் தொடக்கத்தில் ரஷ்யா மொத்தம் 2,700 முக்கிய போர் டாங்கிகளை கொண்டிருந்தது. மோதலின் தொடக்கத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு 2,000 ஜாவ்லின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை (Javelin anti-tank missiles) வழங்கியது மேலும் குறைந்தது 2,000 ஏவுகணைகளை அனுப்பியுள்ளது. ஜாவ்லின் ஏவுகணைகள் மூலம் டாங்கியின் மிகவும் பலவீனமான பகுதியான மேற்பரப்பில் தாக்கி ஏவுகணையை வெடிக்கவைக்கலாம் என்று அதன் தயாரிப்பாளரான லாக்ஹீட் மார்ட்டின் கூறுகிறது.

நிறைய ரஷ்ய டாங்கிகளில், ஏவுகணைகளின் தாக்கத்தை எளிமையாக தாங்கிக்கொள்ளும் ரியாக்டிவ் கவசம் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், ஜாவ்லின் ஏவுகணையில் இரண்டு warhead பொருத்தப்பட்டுள்ளன. ஒன்று எதிர்வினை கவசத்தை பலவீனமாக்குகிறது, இரண்டாவது டாங்கியின் உட்புறம் வரை சென்று தாக்குகிறது.

பிரித்தானியா மட்டும் குறைந்தது 3,600 NLAW ஏவுகணைகளை (Next Generation Light Anti-tank Weapon missiles) உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. இவை டாங்கிகளின் ஒப்பீட்டளவில் வெளிப்படும் சிறு கோபுரத்தின் மேல் செல்லும் போது வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

றோயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டில் (RUSI) நிலப் போர் ஆராய்ச்சி ஆய்வாளர் நிக் ரெனால்ட்ஸ் கூறுகையில், "ஜாவ்லின் மற்றும் NLAW இரண்டும் மிகவும் சக்திவாய்ந்தவை. இவை இரண்டின் உதவி இல்லாமல், உக்ரைனின் நிலைமை மிகவும் வித்தியாசமாக இருக்கும்" என்று கூறுகிறார்.

அதேசமயம், அமெரிக்கா உக்ரைனுக்கு 100 ஸ்விட்ச்ப்ளேட் எதிர்ப்பு டாங்கி ட்ரோன்களை (Switchblade anti-tank drones) வழங்குகிறது. Kamikaze ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் அவை செயற்பாட்டாளரிடமிருந்து மைல்களுக்கு அப்பால் ஒரு இலக்குக்கு மேல் வட்டமிட்டு, பின்னர் ஒரு டாங்கியின் மேல் விழுந்து, அவற்றின் நுனியில் உள்ள பயங்கரமான வெடிபொருள் மூலம் டாங்கிகளை எளிமையாக தகர்த்தக்கூடியவை.

No comments: