News Just In

3/17/2022 12:28:00 PM

நாட்டிலுள்ள, உலகத்திலுள்ள முக்கியமான பிரச்சினை சம்பந்தமாக பேசக் கூடிய தளமாக பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் : உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்



நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனையுடன் இணைந்து "மேன்மையான சுகாதாரம்" என்ற தலைப்பில் தொடர்ச்சியாக,விரிவுரைகளை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ள விழிப்பூட்டல் விரிவுரை நிகழ்வு புதன்கிழமை (16) பல்கலைகழக பொதுநூலக மண்டபத்தில் முதலாவது விரிவுரையாக "மனவழுத்தமற்ற எதிர்காலம்"(Stress free future) என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

நூலகர் எம்.எம்.ரிபாயுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மனநலப் பிரிவு வைத்தியர் எம்.ஜே.எம். நெளபல் முதல் விரிவுரையாக "மன அழுத்தமில்லாத எதிர்காலம்" என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார். இங்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ், பல்கலைக்கழக வர்த்தக, முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதிசபீனா கஸ்ஸாலி, பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.வி.ஏ. வாஜித், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்தியர்கள், சிரேஷ்ட உதவி நூலகர்களான எம்.சி.எம். அஸ்வர், கலாநிதி மஸ்ரூபா மஜீட், விரிவுரையாளர்கள், உயர் அதிகாரிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், நாட்டிலும் உலகிலுமுள்ள முக்கியமான பிரச்சினைகளை பேசக் கூடிய தளமாக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும். பல்கலைகழகத்தில் கற்றல், கற்பித்தல் முதலாவதாக இருக்க வேண்டும், இரண்டாவதாக அறிவை பரப்புதல், மூன்றாவதாக பல்கலைக்கழகம் ஏனைய பிராந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து பல்கலைக் கழகத்துக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும், அதேபோன்று பிராந்தியம், சமூக அமைப்பு, நூலகம் இன்னும் பல சமூக அமைப்புக்கள் போன்றவற்றிக்கு தேவையானதை பல்கலைக் கழகத்திலிருந்து அறிவை கொடுக்க வேண்டும்.

நான் கல்வி கற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் மற்றும் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்புக்களில் மாணவர்களுக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். தற்போது எங்களுடைய நாட்டைப் பொருத்தவரை பொருளாதார பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்கு என்ன பங்களிப்பு செய்ய வேண்டும், உக்ரைன் ரஷ்யா போர் பிரச்சினை சம்பந்தமாக பேசப்படவேண்டும், நாட்டிலுள்ள, உலகத்திலுள்ள முக்கியமான பிரச்சினை சம்பந்தமாக பேசக் கூடிய தளமாக பல்கலைக்கழகம் இருக்க வேண்டும்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து இன்று அதற்கான அடித்தளத்தை இட்டு இருக்கின்றோம். குறிப்பிட்ட தலைப்புக்களை தெரிவு செய்து பீடங்கள், நூலகம், திணைக்களம், போன்றவற்றில் நடாத்த வேண்டும். மட்டுமின்றி இனிவரும் நிகழ்வுகளில் வெளியிலுள்ளவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் அனைவரும் பங்குபற்றி அறிவைப்பெற்றுக் கொள்ளுகின்ற கற்றல், கற்பித்தல், செயற்பாடுகளை கட்டாயமாக இடம் பெறுகின்ற பணி பல்கலைக்கழகத்தில் நடைபெற வேண்டும். இச்செயலமர்வினை வெற்றிகரமாக நடாத்த உதவிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அனைத்து வைத்தியர்கள் உட்பட நூலகர், சிரேஷ்ட நூலர்கள், உதவி நூலர்கள், நூலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


No comments: