News Just In

3/15/2022 06:41:00 PM

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர்!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை சுட்டிக்காட்டியும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெற்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள், செயலக வளாகத்திற்குள் போலியான சவப்பெட்டியையும் மலர் மாலையையும் வீசியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சிறப்பு அதிரடிப்படையினரால் செயலக வளாகத்துக்கு வெளியே பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது .

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் உரையாற்றிய சஜித பிறேமதாச, அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டும் அல்லது ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு யார் தேவை என்பதை மக்கள் தீர்மானிப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மக்கள் எதற்காக தங்களை தெரிவு செய்தார்களோ அதனை நிறைவேற்ற முடியாவிட்டால் விலகிச்செல்லவேண்டும் .

இந்த துன்பங்களை இதற்கு மேல் எங்களால் அனுபவிக்க முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் இந்த துன்பங்களிற்கு ராஜபக்ச அரசாங்கமும் ராஜபக்ச குடும்பமுமே காரணம் அவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கான தருணம் இது எனவும் சஜித குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை சீரழித்த அரசாங்கம் வீட்டிற்கு செல்லவேண்டும் என தெரிவிக்கவே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம். தற்போதைய அரசாங்கத்தினால் பறிபோன இலங்கையின் அடையாளத்தை தனித்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் நாட்டைஅழிவின் விழிம்பிலிருந்து பாதுகாக்கவேண்டிய தருணம் இதுவெனவும் தெரிவித்துள்ளார்.

No comments: