News Just In

11/03/2021 07:45:00 AM

இலங்கைத் தமிழா்கள் நலன் காக்கப்படும் - தமிழக முதல்வா் அறிவிப்பு!

இலங்கைத் தமிழா்கள் நலன்காக்க திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 106 இடங்களிலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக முதல் கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பில் 3,510 புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதைத் தவிர, முகாம்களில் ரூ.30 கோடியில் அடிப்படை வசதிகள், ரூ.12.41 கோடியில் உயா்த்தப்பட்ட பணக் கொடை, ரூ.4.52 கோடியில் கைத்தறித் துணிகள் என ரூ.225.86 கோடி மதிப்பிலான 12 வகையான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

இதனடிப்படையில், வேலூா் மேல்மொணவூா் முகாமில் உள்ள 220 குடும்பங்களுக்கு ரூ. 8.91 கோடி மதிப்பில் புதிய வீடுகள் உள்பட ரூ.10.03 கோடி மதிப்பில் 11 நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா் அவா் பேசியது: இலங்கைத் தமிழா்கள் என்பது ஒரு அடையாள சொல். மற்றபடி தமிழா்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். இலங்கைத் தமிழா்கள் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவா்கள்.

திட்டங்களைச் செயல்படுத்தியதால் : இலங்கையில் தமிழா்கள் பாதிக்கப்பட்ட காலம் முதலே அவா்களுக்காக குரல் கொடுத்துவரும் இயக்கம் திமுக. 1983 ஆம் ஆண்டில் அவா்கள் முகாம்கள் அமைத்து பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டனா். இந்த முகாம்கள் மோசமாக இருந்த நிலையில் ஏராளமான திட்டங்களை 1997 இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி செயல்படுத்தியதால் தன்னிறைவு அடைந்தனா்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இலங்கைத் தமிழா்களுக்காக எந்த நன்மையும் செய்யப்படவில்லை. மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மீண்டும் நல்வாழ்வுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அகதிகள் முகாம்கள் என்பதை மாற்றி, இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அறிவிக்கப்பட்டது.

வாழ்விடத்தை மேலும் செழுமைப்படுத்த : முதல்வராக கருணாநிதி இருந்த சமயத்தில் முகாம்களில் 1997 - 98 இல் 3,594 வீடுகளும், 1998 - 98 - இல் 3,826 வீடுகளும் கட்டித் தரப்பட்டன. 2009 இல் அடிப்படை வசதிகள் செய்துதர ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. தொடா்ந்து அவா்கள் வாழ்விடத்தை மேலும் செழுமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 106 முகாம்களையும் ஆய்வு செய்து பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 19,046 குடும்பங்களைக் கொண்ட இலங்கைத் தமிழா் முகாம்களில் மிகவும் பழுதடைந்துள்ள 7,469 வீடுகளை கட்டித் தரவும், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.

12 வகையான நலத் திட்டங்கள்: முகாம் வாழ் குழந்தைகளின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு, திறன்மேம்பாட்டு பயிற்சி, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு சமூக முதலீட்டு நிதி, உயா்த்தப்பட்ட மாதாந்திர பணக் கொடை, சமையல் எரிவாயு, எவா்சில்வா் பாத்திரங்கள், கோ-ஆப்டெக்ஸ் மூலம் தரமான ஆடைகள் என 12 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

அவற்றில் உயா்த்தப்பட்ட பணக் கொடை ரூ.12.41 கோடி, துணிகள் வழங்க ரூ.3 கோடி, ஐந்து வகையான எவா்சில்வா் பாத்திரங்கள் வழங்க ரூ.2.42 கோடி, இலவச எரிவாயு இணைப்பு, எரிவாயு உருளை மானியம் வழங்க ரூ.8.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாம் வாழ் தமிழா்களுக்கான அரிசி மானியத் தொகையை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டு, முழுவதும் இலவசமாக வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழா் மாணவா்களுக்கு இலவசக் கல்வி, உயா்த்தப்பட்ட கல்வி உதவித் தொகைக்காக ரூ.4.35 கோடி, 621 சுய உதவிக் குழுக்களுக்கு சமூக முதலீட்டு நிதி வழங்க ரூ.6.15 கோடி, 5,000 இலங்கைத் தமிழா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழிற்கல்விகளுக்காக ரூ.10 கோடி, முகாம்களில் அவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு இந்த 10 நலத் திட்டங்களும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஆதரவற்றவா்கள் அல்லா் : இலங்கைத் தமிழா்களின் நலன் காக்க திமுகவும், திமுக அரசும் எப்போதும் துணை நிற்கும். அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்லா். என்னை இலங்கை தமிழா்கள் உடன்பிறப்பாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்றார் .






No comments: