News Just In

8/08/2021 12:05:00 PM

முன்னாள் போராளிகள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டார்கள் இராணுவத்தினர் ஆகிய நாம் அதை மறந்து உங்களுக்கு உதவி புரிகிறோம்!!


முன்னாள் போராளிகள் ஆகிய நீங்கள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டீர்கள். இராணுவத்தினர் ஆகிய நாம் அதை மறந்து உங்களுக்கு உதவி புரிகிறோம். முன்னரைப் போல இனியும் பிழையான வழியில் செல்லாது, நல்வழியில் பயணியுங்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

அண்மையில் அரசாங்கத்தினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இருக்கும் ஏனையோரையும் விடுவிக்க கூடியதாக இருக்கும். உங்கள் விடுதலையை அவதானிக்கிறார்கள். எனவே நீங்கள் சமூகத்தில் நல்ல பிரஜையாக செயற்பட வேண்டும். அதாவது முன்னரைப் போல பிழையான வழிகளில் செல்லாது சரியான பாதை நோக்கி செல்லுங்கள். இல்லையேல் உங்கள் எதிர்காலம் பூச்சியமாகிவிடும்.

இராணுவம் என்ற ரீதியில் நாங்கள் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம். அதாவது வீடு கட்டித் தருவது என்றாலும் சரி, வேறு ஏதாவது உதவி என்றாலும் சரி, நாங்கள் அதை செய்யத் தயாராக உள்ளோம். உங்களை எமது சகோதரர்களாக பார்க்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

No comments: