News Just In

7/05/2021 07:07:00 PM

மட்டக்களப்பில் வயோதிபரான மீனவர் குளத்தில் மூழ்கி மரணம்...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள புத்தம்புரி குளத்திலிருந்து வயோதிபரான மீனவர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை 05.07.2021 மீட்கப்பட்ட இந்த சடலம் நெல்லிப்போடியாகல் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி நடராசா (வயது 75) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

வழமைபோன்று இவர் தனது வீட்டிலிருந்து மீன்பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை 04.07.2021 மாலை புத்தம்புரி குளத்திற்குச் சென்றுள்ளார்.

திங்கட்கிழமை அதிகாலை ஏனைய மீனவர்களும் வழமை போன்று புத்தம்புரிக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தோணியொன்று குளத்தில் மிதப்பதையும் அதனருகே ஒருவர் வலையில் சிக்கிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்து கிடப்பதையும் அவதானித்துள்ளனர்.

மரணித்திருப்பவரை அடையாளம் கண்டு கொண்ட ஏனைய மீனவர்கள் தகவலை உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் அறிவித்ததன் பேரில் சடலம் மீட்கப்பட்டது.

இவருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாக உறவினர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: