News Just In

7/04/2021 06:29:00 PM

வெளியாகியது புதிய சுகாதார வழிகாட்டல்கள்- பல்வேறு நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தடை...!!


நாட்டில் கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலாகவுள்ள இந்த சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

1. பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க, ஆசன கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், மேல் மாகாணத்தில் இந்த எண்ணிக்கை 30 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2. அத்துடன், தனியார் மற்றும் வாடகை வாகனங்களில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும்.

3. ஆடைத்தொழிற்சாலைகள் உட்பட ஏனைய தொழிற்சாலைகள் இயங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

4. அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களைக் கொண்டு இயங்க வேண்டும்.

5. சேவை அவசியத்துக்கு ஏற்ப, கடமைக்கு அழைக்கப்படக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவன பிரதானி தீர்மானிக்கலாம். அத்துடன் வீட்டிலிருந்து பணியாற்றக்கூடியவர்கள், அதனை நடைமுறைப்படுத்துவது சிறந்ததாகும்.

6. திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி இல்லை.

7.எனினும், மணமகன் மற்றும் மணமகள் உட்பட ஆகக்கூடியது 10 பேரை மாத்திரம் கொண்டு பதிவு திருமணத்தை நடத்தலாம்.

8. கொவிட் அல்லாத காரணத்தினால் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள், பூதவுடல் கையளிக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க 15 பேருக்கு மாத்திரமே அனுமதி உண்டு.

10. வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் அடகுப்பிடிப்பு நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் ஒரே தடவையில் மொத்தமாக 10 வாடிக்கையாளர்கள் மாத்திரமே சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

11. விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திறந்தவெளி சந்தைகள் மற்றும் வாராந்த சந்தைகள், உள்ளுராட்சி நிறுவனங்களினால் அமுலாக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ், இயங்க முடியும்.

12. பொருளாதார மத்திய நிலையங்களை, மொத்த விற்பனைக்காகத் திறக்க முடியும். பதிவுசெய்யப்பட்ட நடமாடும் சேவை வர்த்தகர்கள், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

13. அத்துடன், சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய, பதிவுசெய்யப்பட்ட நடைபாதை வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சில்லறை வர்த்தக நிலையங்கள், கடைகள் என்பனவற்றை, சுகாதார விதிமுறைகளுக்கு அமையத் திறக்க முடியும்.

14. வெதுப்பகம் மற்றும் வெதுப்பக சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சந்தர்ப்பத்தில், அதிகபட்சமாக 3 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது

15. திருமண வைபவம், வீட்டில் இடம்பெறும் விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

16. அத்துடன், மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

17. சமூக களியாட்ட விடுதிகளுடனான மதுபானசாலைகள், இரவு நேர களியாட்ட விடுதிகள், சூதாட்ட மற்றும் பந்தய நிலையங்கள் என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

18. சிறப்பங்காடிகள் மற்றும் ஆடை விற்பனை நிலையங்களில், அவற்றின் மொத்த இடப்பரப்பில் 25 சதவீதமான அளவு வாடிக்கையாளர்களை மாத்திரம் ஒரே தடவையில் அனுமதி முடியும்.

19. எனினும், உடற்பிடிப்பு நிலையங்களை (ஸ்பா) திறப்பதற்கு அனுமதியுண்டு. சிகையலங்கார நிலையங்களில் சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பணிகளை முன்னெடுக்க முடியும்.

20. சிறைச்சாலை, முதியோர் மற்றும் சிறுவர் விடுதிகளுக்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. திரையரங்குகள் மற்றும் நூதனசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

No comments: