News Just In

6/13/2021 04:29:00 PM

மட்டக்களப்பு- கோறளைப்பற்று மத்தியில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துறைச்சேனையில் உள்ள இரண்டு கிராம சேவகர் பிரிவிலுள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திலும், வாழைச்சேனையில் உள்ள மூன்று கிராம சேவகர் பிரிவிலுள்ள அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையிலும் கொவிட் 19 தடுப்பூசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச கிராம மட்ட பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 25,000 தடுப்பு ஊசிகள் முதல் கட்டமாக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் பதினான்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரனின் வழிகாட்டலில் நடைபெற்று வருகின்றது.












No comments: