News Just In

6/18/2021 12:25:00 PM

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள்...!!


உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் இன்றுஇலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொதுவான இடத்தில் விளையாடப்போகும் முதல் டெஸ்ட் இது தான். மேலும் விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி எந்த ஐ.சி.சி. கிண்ணத்தையும் வென்றதில்லை.

பந்துவீச்சு சவால்
தனிமைப்படுத்துதல் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் 15 நாட்களுக்கு முன்பே இங்கிலாந்துக்கு சென்று விட்டனர். பயிற்சி ஆட்டங்கள் இல்லாவிட்டாலும் இந்திய அணியினர் தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி தங்களை தயார்படுத்தி உள்ளனர். இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகமும், பவுன்சும் அதிகமாக இருக்கும். அதுவும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை வந்து விட்டாலோ அல்லது மழை பெய்தாலோ பந்து தாறுமாறாக ‘ஸ்விங்’ ஆகத் தொடங்கி விடும். அதனால் வேகப்பந்து வீச்சை மிகவும் துல்லியமாக கணித்து நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால் நிச்சயம் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். மிடில் வரிசையில் கேப்டன் விராட்கோலி, ‘பொறுமையின் சிகரம்’ புஜாரா ஆகியோரைத் தான் அணி அதிகமாக நம்பி இருக்கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் அதிரடியில் மிரட்டிய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டின் சூறாவளி பேட்டிங்கையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மாவின் தாக்குதல் முக்கிய பங்கு வகிக்கும். அணி நிர்வாகம் நேற்றிரவு அறிவித்த ஆடும் லெவனில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களும் இந்த டெஸ்டில் களம் இறங்குவது உறுதி
செய்யப்பட்டது. ஆடுகளம் வறண்டு காணப்பட்டால் சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் இந்திய அணி 1983-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை, 2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை, 2011-ம் ஆண்டில் 50 ஓவர் உலக கோப்பை, 2002-ம் ஆண்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை
இலங்கையுடன் பகிர்வு, 2013-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை இப்படி 5 கோப்பைகளை வென்று இருக்கிறது. ஆனால் விராட் கோலி கேப்டன் ஆன பிறகு இந்திய அணி எந்த ஐ.சி.சி. பட்டத்தையும் உச்சி முகர்ந்ததில்லை. அவரது தலைமையில் இந்தியஅணி 2017-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையில் இறுதிப்போட்டியிலும், 2019-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் அரை இறுதியிலும் தோல்வி கண்டது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கும் 32 வயதான விராட் கோலி சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வாகை சூட வேண்டியது முக்கியமாகும். அது மட்டுமின்றி ஐ.சி.சி. போட்டிகளில் இந்திய அணி நியூசிலாந்தை புரட்டியெடுத்து 17 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டவும் இப்போது அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

நியூசிலாந்து எப்படி?
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது, மனரீதியாக அவர்களின் நம்பிக்கைக்கு உத்வேகம் அளித்துள்ளது. முழங்கை காயத்தில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டு விட்டதால் அது நியூசிலாந்துக்கு மேலும் உற்சாகத்தை தந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசிய கான்வே, கேப்டன் வில்லியம்சன், டாம் லாதம், ராஸ் டெய்லர் ஆகியோர் அவர்களின் பேட்டிங் வரிசைக்கு வலு சேர்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நியூசிலாந்தின் பந்து வீச்சு அசுர பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் டிெரன்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர் ஆகியோர் நீண்ட காலமாக அபாயகரமான கூட்டணியாக இருக்கிறார்கள்.

‘ஸ்விங்’ மற்றும் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதல் தொடுப்பதில் கில்லாடிகள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் உருவாகி விட்டால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் குடைச்சலாக இருப்பார்கள். நியூசிலாந்து அணி ஐ.சி.சி. போட்டிகளில் இதுவரை 2000-ம் ஆண்டில் சாம்பியன் கோப்பையை மட்டுமே வென்றுள்ளது. 2015 மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று போனது. கடந்த 7 ஆண்டுகளில் பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு உலக அளவிலான கோப்பை ஏக்கத்தை தணிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிட்டாது. ஆக, நியூசிலாந்து வீரர்களும் எல்லா வகையிலும் வரிந்து கட்டி நிற்பார்கள். இரு அணியினரும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

எனினும், இன்று சவுத்தாம்ப்டனில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆட்டம் திட்டமிட்டப்படி நடக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக, போட்டி தொடங்கும் நேரத்தில் 80 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வீரர்கள், ரசிகர்கள் என்று போட்டியை மிக ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், மழையின் இந்த அச்சுறுத்தல் போட்டி நடப்பதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைத்திருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள 'The Ageas Bowl' ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இன்று ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை இப்போட்டி நடைபெறுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அதுவே, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ளது. 3 மணிக்கு டாஸ் போடப்படும். ஒவ்வொரு நாளும் 6 மணி நேரம் போட்டி நடைபெறும் என்பதால், இரவு 10 மணியளவில் ஆட்டம் முடிவடைய வாய்ப்புள்ளது.

ஹாட்ஸ்டார் இப்போட்டியை எந்தெந்த நாடுகளில் எந்தெந்த சேனல்களில் பார்க்கலாம் என்ற லிஸ்ட் இங்கே,
இந்தியா - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்
நியூசிலாந்து - ஸ்கை ஸ்போர்ட்ஸ்
இங்கிலாந்து - ஸ்கை ஸ்போர்ட்ஸ்
தென்னாப்பிரிக்கா - சூப்பர்ஸ்போர்ட் மற்றும் எஸ்ஏபிசி

அதுமட்டுமின்றி, தமிழ் மைக்கேல் தமிழ் தளத்தில் லைவ் கமெண்ட்ரியை நேயர்கள் காணலாம். ஆன்லைனில், ஹாட்ஸ்டாரில் போட்டியை ரசிக்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடும்
இந்திய அணி வீரர்கள் விவரம்:-
ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜின்க்ய ரஹானே(துணைக் கேப்டன்), ரிஷப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.

நியூசிலாந்து அணி வீரர்கள் விபரம்:- டிவான் கான்வே, டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் அல்லது வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.

இந்த இறுதிப் போட்டிக்கான விதிகளையும் ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாள் வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஒரு நாள் ஆட்டம் பாதித்தால், அடுத்த நாள் விரைவாக தொடங்க அனுமதிக்கப்படும். அதேசமயம், மாலையில் ஒரு மணி நேரம் வரை கூடுதலாக விளையாடுவது அனுமதிக்கப்படும். மாற்று ஆப்ஷனாக ரிசர்வ் நாள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரிசர்வ் நாள் பயன்படுத்துவது தொடர்பாக ஐந்தாவது நாளின் கடைசி ஒரு மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும். இதை மேட்ச் ரெஃபரி இரு நடுவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் 5 நாட்களில் முடிவு எட்டப்படவில்லை என்றால் ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று ஐசிசி தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில் கோப்பையை உச்சிமுகரும் அணிக்கு கதாயுதத்துடன் ரூ.11¼ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.இந்த மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்டில் விளையாடி இரண்டிலும் தோற்று இருக்கிறது. நியூசிலாந்து இங்கு டெஸ்டில் கால்பதிப்பது இதுவே முதல்முறையாகும்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக இங்கு 4 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: