சாம்பியன் யார்? என்பதை அறிய இன்னும் 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இதில் அபுதாபியில் இன்றிரவு அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்றில் டெல்லி கெப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் 8 வெற்றிகளுடன் 2 ஆவது இடத்தை பெற்ற டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸிடம் படுதோல்வி அடைந்தது.
எனினும் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொடரின் தொடக்கத்தில் வீறுநடை போட்ட டெல்லி இப்போது தடுமாறுகிறது. அண்மைய போட்டிகளில் தொடக்கம் மோசமாக அமைந்துள்ளது.
பிரித்வி ஷா கடந்த 7 ஆட்டங்களில் வெறும் 30 ஓட்டங்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இது போல் நடுத்தர வரிசை துடுப்பாட்டமும் நிலையானதாக இல்லை.
எனவே இவ்வாறான குறைபாடுகளை நீக்கினால் தான் வலுவான பந்துவீச்சை கொண்ட ஐதராபாத்துக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியும்.
பந்து வீச்சில் முந்தைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தவிர காஜிசோ ரபடா , அன்ரிச் நோர்டியா உள்ளிட்டோர் ஓட்டங்களை வாரி வழங்கினர். அகவே பந்து வீச்சு தொடர்பிலும் டெல்லக்கு கூடிய கவனம் தேவை.
இது இவ்வாறிருக்க ஆரம்பத்தில் சொதப்பிய ஐதராபாத் அணி முக்கியமான தருணத்தில் விசுவரூபம் எடுத்திருக்கிறது.
வெளியேற்றுதல் சுற்று உட்ளிட்ட இறுதி 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த ஐதராபாத் அணிக்கு பந்து வீச்சே பிரதான பலமாகும்.
குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (19 விக்கெட்டுடன் ஓவருக்கு சராசரி 5.30 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்), வேகப்பந்து வீச்சாளர்கள் சந்தீப் ஷர்மா (13 விக்கெட்), டி.நடராஜன் (16 விக்கெட்), ஜோசன் ஹோல்டர் (13 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் அசத்துகிறார்கள்.
துடுப்பாட்த்தில் டேவிட் வோர்னர் (4 அரைசதத்துடன் 546 ஓட்டம்), வில்லியம்சன் (250 ஓட்டம்), மனிஷ் பாண்டே (404 ஓட்டம்) நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றனர்.
இதேவேதளை உபாதை காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத விருத்திமான் சஹா இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
இத் தொடரில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த இரு போட்டிகளிலும் ஐதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலமாக ஐதராபாத் அணி 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையுமா? அல்லது டெல்லி அணி முதல்முறையாக இறுதிசுற்றை எட்டி வரலாறு படைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments: