News Just In

9/18/2020 05:59:00 AM

இன்றுமுதல் ஏற்படவுள்ள மாற்றம்- வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட எச்சரிக்கை!!


நாட்டின் தென்மேற்கு பகுதியிலும் வடமேல் மாகாணத்திலும் இன்றுமுதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின்வேகம் அதிகரித்துக் காணப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, திருகோணமலை முதல் காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் காற்றின்வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்துக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்பிட்டிய முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் 2 தசம் 5 முதல் 3 மீற்றர் வரையான உயரத்துக்கு அலைகள் மேலெழும்பக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, இது தொடர்பில் கடலுக்கு செல்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: