
நுவரெலியா நகரிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து காரொன்றில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மருத்துவரான பி.ஆர். ஷ்யாமா தர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தனது காதலரான கன்னொருவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க என்பவருடன் அண்மையில் நுவரெலியாவிற்கு வந்து தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (16) இரவு சுமார் 10.30 மணியளவில், குறித்த பெண்ணை ஒருவர் தூக்கிச் சென்று காரொன்றில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பெண்ணின் மூத்த சகோதரர் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இருவருக்கும் இடையே ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் பின்னர் பெண் கொலை செய்யப்பட்டு அவரது உடலை காரில் கொண்டு சென்று கண்டி – தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், பெண்ணுடன் நுவரெலியாவிற்கு வந்ததாகக் கூறப்படும் ஆண் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நுவரெலியா தடயவியல் பிரிவின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடுதியில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சிசிடிவி காட்சிகள், விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புத் தரவுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
No comments: