News Just In

9/15/2020 12:10:00 PM

சுற்றுலா மையமாக மாறப்போகும் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் உள்ள ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான வேலைத் திட்டங்களில் தற்போது மாவட்டச் செயலகமாக இயங்கிவரும் ஒல்லாந்தர் கோட்டையை வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ். கெட்டியாராச்சி கடந்த வார இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையிலான அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலாமையமாக மாற்றியமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்தோடு மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா வருமானத்தை ஈட்டித் தரும் இடமாக மாற்றியமைப்பதோடு அதன் சரித்திரப் பழமை மாறாமல் பராமரிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டதற்கமைவாக தற்போது பழுதுபார்த்துப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒல்லாந்தர் கோட்டையில் கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகள் பண்பாட்டு கலாச்சார உடைகள் உணவுகள் நூதனசாலை உட்பட பிரதேசத்தின் பண்பாட்டு பின்னணிகளை பிரதிபலிக்கின்ற ஒரு மத்திய நிலையமாக மாற்றி அமைதற்கான முதற்கட்ட வேலையாக தகவல் மையம் ஒன்றை அமைத்து அதனூடாக செயற்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறினர்.









No comments: