News Just In

4/20/2020 12:09:00 PM

ஊரடங்கை பயன்படுத்தி திருகோணமலையில் நடந்த சம்பவம்; ஐவர் கைது!?


வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமான திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட பன்குளம் வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பன்குளம் வனப்பகுதியில் அமைந்திருக்கின்ற பல்லவகுளத்தை அண்மித்த பகுதிகளில், சட்டவிரோதமான முறையில் 20 ஏக்கர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பானது இதன்போது சேதமாக்கப்பட்டுள்ளது.

வீரை, பாலை ஆகிய மரங்களின் அடியில் எரியூட்டப்பட்டு அவை இறந்தபின்னர், அவற்றை சிறு சிறு குற்றிகளாகத் தறித்து ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. வெட்டப்பட்ட மரங்களை ஏற்றிச்செல்ல போக்குவரத்து இடையூறு உள்ளதன் காரணமாக மரக்குற்றிகளை வனப்பகுதியிலேயே விட்டுசென்றுள்ளனர்.

இவையனைத்தும் கொரோனா தொற்று காரணமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்ட காலப்பகுதியில், விவசாயம் செய்வாதாகக் கோரி பெறப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் மூலம் போக்குவரத்துச்செய்த குறித்த சந்தேகநபர்களின் மூலமாகவே முன்னெடுக்கப்பட்டதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை, ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலுக்கமைய மேலும் இருவரை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: