News Just In

11/29/2019 09:05:00 PM

மாணவி படுகொலை முக்கிய குற்றவாளியான சுவிஸ்குமாரை விடுவித்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு


புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபர் இல்லாமலேயே வழக்கை விளக்கத்துக்கு எடுக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் வழக்கின் முதலாவது எதிரியான வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று மன்றில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. எதிரி தன்மீதான குற்றச்சாட்டை மறுத்து சுற்றவாளி என்று மன்றுரைத்தார்.

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சுவிஸ்குமார் என்பவரை சட்டமுறையற்ற வகையில் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்க உதவியதன் மூலம் தண்டனைச் சட்டக் கோவை 209ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றமொன்றைப் புரிந்தமை மற்றும் அதற்கு ஒத்துழைத்ததன் மூலம் 109ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 209ஆம் பிரிவின் கீழான குற்றமொன்றைப் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா உள்ளிட்ட 30 பேர் வரை சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

முதலாவது சந்தேகநபர் வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க முன்னிலையானார். இரண்டாவது சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளதால் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.

வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். முதலாவது எதிரிக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன் அதன் பிரதி அவருக்கு வழங்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், சுற்றவாளி என்று மன்றுரைத்தார்.

“இந்த வழக்கின் ஆவணங்கள் உரியவாறு வழக்குத் தொடுனரிடமிருந்து கிடைக்கவில்லை. அத்துடன், இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சில்வா நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அதுதொடர்பாக சட்ட மா அதிபருடன் கலந்துரையாடப்படவேண்டும்” என்று எதிரி லலித் ஜெயசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

எதிரி தரப்பு விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், வழக்கின் ஆவணங்களை எதிரி தரப்புக்கு வழங்குவதற்காக வரும் பெப்ரவரி 18ஆம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்தார்.

No comments: