News Just In

11/26/2019 03:30:00 PM

யாழ் - சென்னை இடையிலான மற்றுமொரு விமான சேவை ஜனவரியில் ஆரம்பம்


பிற்ஸ் எயார் தனியார் நிறுவனம் யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான சேவையை நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் விமானத்தை தரை இறக்குவதற்கான அனுமதி இது வரையில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாகவே ஏற்கனவே திட்டமிட்டபடி பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை தமது நிறுவனத்தினால் மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமது நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இந்தியா சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகளை இந்திய விமான நிறுவனமான எலைன்ஸ் விமான நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் இந்த விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. நாளாந்தம் சுமார் 50 பயணிகள் பயணம் செய்வதாகவும் விமான நிலைய பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

No comments: