News Just In

11/29/2019 12:08:00 PM

கடும் மழை காரணமாக நாவற்குடா பிரதேச மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றமையினால் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் நாவற்குடா கிழக்குப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாவற்குடா ஆரம்பப் பாடசாலையில் குறித்த பகுதியிலுள்ள இருபத்தைந்து (25) குடும்பங்களை சேர்ந்த எண்பத்தேழு(87) பேர்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பணிப்புரைக்கமைவாக மாவட்ட அனர்த்த நிவாரண நிலையத்துர்டாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான விபரங்களை காலநிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி க.சூரியகுமார் குறிப்பிடுகையில் தாழமுக்கத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், அடுத்து வருகின்ற 24 மணி நேரத்திற்குள் 100 மில்லிமீற்றர் தொடக்கம் 150 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்படுவதாக தெரிவித்தார்.

பதிவான மழைவீழ்ச்சி விபரம்
நவகிரி: 96.01 மில்லிமீற்றர்

தும்பங்கேணி: 74.0 மில்லிமீற்றர்

மைலம்பாவெளி :65.03 மில்லிமீற்றர்

பாசிக்குடா: 23.0 மில்லிமீற்றர்

உன்னிச்சை: 111.0 மில்லிமீற்றர்

வாகனேரி: 40.07 மில்லிமீற்றர்

கட்டுமுறிவு: 27.0 மில்லிமீற்றர்

உறுகாமம்: 103.05 மில்லிமீற்றர்

கிரான்: 70.00 மில்லிமீற்றர்

மட்டக்களப்பு நகர்:102.04 மில்லிமீற்றர் 

மழை நீர் வழிந்தோடுவது மிகவும் குறைவான பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் கடும் அவதானத்துடன் செயல்படும் படியாகவும் அவ்வாறு மழை நீர் அதிகரிக்கும் பட்சத்தில் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான நடவடிக்கைக்காக கிராம உத்தியோகத்தர்கள், தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள் ஆயத்தமான நிலையில் உள்ளதாகவும், கிரான் பிரதேச பகுதிகளுக்கும் அங்கு வாழ்கின்ற மக்கள் நகரப்பகுதிகளுக்குமான போக்குவரத்திற்கு இரண்டு இயந்திரப்படகுகளும் தற்போது சேவையில் உள்ளதாக அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

No comments: