பங்களாதேஷில் நடைபெறவுள்ள வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை திங்கட்கிழமை (21) அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் சம்பியன் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்திருந்தது. குறித்த குழாத்துக்கு தலைமை தாங்கியிருந்த சரித் அசலங்க இம்முறையும் அணியின் தலைவராக செயற்படவுள்ளார். இவருடன் கடந்த ஆண்டு தொடர் நாயகனாக தெரிவுசெய்யப்பட்ட கமிந்து மெண்டிஸ் உப தலைவராக செயற்படவுள்ளார்.
நான்காவது தடவையாக நடைபெறவுள்ள இந்த வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரில், 23 வயதுக்குட்பட்ட வீரர்கள் கொண்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. டெஸ்ட் விளையாடும் அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளும் இத்தொடரில் விளையாடுகின்றன.
இலங்கை அணியை பொறுத்தவரை உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வரும் இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் சபை இந்த தொடரில் வாய்ப்பை கொடுத்துள்ளது. இளம் நட்சத்திர வீரர்களான பெதும் நிஸ்ஸங்க, ஹசித போயகொட, அஷேன் பண்டார, சம்மு அஷான் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20ஐ தொடரில் களமிறங்கிய மினோத் பானுக ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை அணிக்காக களமிறங்கியிருந்த வேகப் பந்துவீச்சாளர் அசித பெர்னாண்டோ, இளம் வேகப் பந்துவீச்சாளர்களான கலன பெரேரா, சகலதுறை வீரர் ஜெஹான் டேனியல், ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். சுழல் பந்துவீச்சை பொருத்தவரை அனுபவ வீரர் அமில அபோன்சோ, சச்சிந்து கொலம்பகே மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரில் 8 அணிகளும் AB என இரண்டு குழுக்களாக மோதவுள்ளதுடன் B குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
No comments: