News Just In

10/26/2019 08:10:00 PM

மட்டக்களப்பு கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலய கேதாரகௌரி விரத பூஜை நிகழ்வுகள்

சிவபெருமானுடைய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. இந்த விரதத்தை அம்மை கௌரியே அனுஷ்டித்தார் என்றால் அதன் பெருமைக்கு நிகர் எதுவுமில்லை. அம்மை ஐயனின் இடப்பாகம் பெற்று அர்தநாரீசுவரராக ஆனது இந்த விரத மகிமையால். கேதார கௌரி விரதம் புரட்டாதி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை முடிய மொத்தம் இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்கலகரமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். மங்களகரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மாங்கல்ய பாக்கியமும், கணவன்,மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும், சகல சௌபாக்கியங்களும் நல்கும் விரதம் இந்த கேதார கௌரி விரதம். தம்பதியர் இருவரும் ஓருயிர் ஈருடலாக வரம் பெற இவ்விரதத்தினை விரும்பி அனுஷ்டிக்க வேண்டும். ஆயுள் முழுவதும் மகிழ்ச்சியான தம்பதிகளாய் வாழ உதவும் விரதம் இது. குடும்பப் பிரச்சனை உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையும் சுபீட்சமான வாழ்க்கையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

திருமூலரால் சிவ பூமி என அழைக்கப்பட இலங்கையில் இந்துக்கள் பலர் கேதார கௌரி விரதத்தினை அனுட்டிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயமான கொத்துக்குளம் முத்து மாரியம்மன் ஆலயத்தில் சுமார் 2000 க்கு அதிகமான அடியவர்கள் நோன்பு நோற்கின்றனர். 

இன்று(26) விரத விசேட பூஜைகள் கொத்துக்குளம் முத்து மாரியம்மன் ஆலயத்தில் சிவஸ்ரீ ராஜ் ஸ்ரீ நிஜோத் பவக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கில் அடியவர்கள் இப் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டனர். நாளை(27) கௌரி விரதத்தின் காப்புக்கட்டும் நிகழ்வு ஆலயத்தில் இடம்பெற இருக்கின்றது.



No comments: