
மொரட்டுவை, மோதர பகுதியில் இன்று (05) காலை ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (05) காலை கரையோர ரயில் மார்க்கத்தில் மொரட்டுவை, மோதர பிரதேசத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது.
சேதமடைந்த ரயில் பாதையைக் கண்டதும், சமந்த பெர்னாண்டோ என்ற நபர் விரைந்து செயற்பட்டு, அந்நேரத்தில் வந்து கொண்டிருந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான ரயிலில் ஏற்படவிருந்த பெரிய விபத்தையும், பல பேரின் உயிர்களையும் குறித்த நபர் காப்பாற்றியுள்ளார். குறித்த நபரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் காரணமாக பாணந்துறையிலிருந்து மொரட்டுவை வரையிலான கடற்கரைப் பாதை இன்று காலை மூடப்பட வேண்டியிருந்தது, மேலும் ரயில் சேவையில் தாமதமும் ஏற்பட்டது.
பின்னர் ரயில்வே ஊழியர்களால் ரயில் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர், தற்போது ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்குவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
No comments: