News Just In

11/09/2023 05:12:00 PM

மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீக்கிரை!






மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ ம் எஸ் ஏ. ரஹீம் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி ஆரையம்பதியில் கல்முனை மட்டக்களப்பு வீதியில் ஆரையம்பதி பிரதான வீதியில் குறித்த பஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு -பொத்துவில் வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்து கடந்த (08.11.2023) மாலை 7 மணியளவில் நிறுத்தி வைத்துவிட்டு, உரிமையாளர் தனது சொந்த இடமான கொக்கட்டிச்சோலைக்குச் சென்று விட்டார்.

குறித்த பேருந்து இன்று அதிகாலை (09.11.2023) தீப்பற்றி எரிவதாக காத்தான்குடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் பார்வையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு படையினர் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் பேருந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ் வண்டி ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






No comments: