News Just In

12/13/2021 07:40:00 PM

சாணக்கியனுக்கு சவால் விடுத்து நஸீர் அஹமட் விவாதத்திற்கு அழைப்பு!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு அழைப்பதாக சவால் விடுத்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த அழைப்புக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது “ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் கௌரவ பிள்ளையானுடன் சேர்ந்து காணிப்பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகிறார்கள்" என்று தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே உங்களுடன் பகிரங்க விவாதத்தை நடாத்த நான் தயாராக இருக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகளுக்கு நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அநீதிகள் குறித்தும் சட்டத்திற்கு முரணாக முஸ்லிம் பிரதேச செயலகங்களின் காணி எல்லைகள் கபளீகரமாக பறி க்கப்பட்டது தொடர்பிலும் அரச அதிகாரிகள் சிலர் முஸ்லிம் பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் மேற்கொண்ட ஓரவஞ்சனையான செயற்பாடுகள் முஸ்லிம்கள் இழந்த காணிகள் இழந்த கிராமங்கள் மற்றும் முஸ்லிம் பிரதேச காணிகள் கபளீகரம் செய்யப்பட்டமை தொடர்பிலுமே உங்களுடன் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த இந்த அழைப்பு விடுக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை இந்நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் குறித்து உங்களுடைய அறியாமையை உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் இது தொடர்பாக திறந்தவெளியில் உங்களுடன் விவாதிக்கும் வகையில் உங்களது சம்மதத்தை நான் எதிர்பார்ப்பதுடன் அதற்குரிய இடம் பொருத்தமான நேரம் தொடர்பில் இருவரும் கலந்தாலோசித்து இந்த பகிரங்க விவாதத்தை நடத்த வேண்டும் என வேண்டுகின்றேன்.

உண்மையுள்ள
இஷற்.ஏ. நஸீர் அஹமட் (பொறியியலாளர்)
பாராளுமன்ற உறுப்பினர்
மட்டக்களப்பு மாவட்டம்.

.எச்.ஹுஸைன்

No comments: