கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்நிலையில் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்று சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (25) பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போது அதனைப் பயன்படுத்தி அதிகளவிலான மக்கள் வீட்டை விட்டு வீதிக்கு வந்தனர்.
தகுந்த காரணமின்றி வீதிக்கு வந்த மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ச பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மிகவும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டனர்.
இந்நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட சட்டத்தரணி ஹபீப் றிபான் தங்களது செயற்பாடு பாராட்டத்தக்கது என்று பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்ததுடன், கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு சிற்றுண்டி ஏற்பாடுகளையும் செய்தார்.
இவ்வாறு மக்கள் நலன்களுக்காக வேண்டி பாடுபடும் பொலிஸாருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்கள் வழங்க வேண்டும் என்று சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.
No comments: