News Just In

4/20/2021 10:38:00 AM

நமது அபிவிருத்தி நாயகர்களின் அபிவிருத்தி என்பது கிழக்கில் பௌத்தத்தை அபிவிருத்தி செய்வதே- மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர்- க.மோகன்!!


அபிவிருத்தி நாயகர்களே உங்கள் அபிவிருத்தி பௌத்த மத அபிவிருத்தி என்பதனை மக்கள் இப்போது தான் உணர்ந்துள்ளனர். செங்கலடி ஈரளக்குளம் புளுட்டுமானோடை பௌத்த மத்தியஸ்தானம் 400 ஏக்கர் விவகாரத்தில் கட்சி பேதமின்றி தமிழர்களின் பூர்விகம் எனும் தொனியில் ஓரணியில் ஒன்று திரளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்று வரும் குழப்ப நிலைமைகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சிப் போட்டி, அதிகாரப் போட்டி என்பவற்றால் மாநகரத்தின் அபிவிருத்தி வேலைகளை முடக்கினால் பாதிக்கப்பட போவது எமது மாநகரமாகும். அண்மைகாலமாக மாநகர அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக நடாத்தப்பட்ட ஆடுபுலி ஆட்டத்தை மக்கள் அவதானித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்போது புதிய பரிமானத்தில் இன்னுமொரு போட்டி நிலை உருவாகியுள்ளது. இது ஆரோக்கியமான செயற்பாடு அல்ல, ஒவ்வொரு நகர்வுகளையும் மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் இதில் பின்னால் இருந்து யார் பகடைக் காய்களை உருட்டுகிறார்கள் என்பதனையும் மக்கள் அறிவார்கள். எனவே நமது மாவட்டத்தையும், மாநகரத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பு வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த மு.று.தேவநாயகம் ஒரு பௌத்த துறவியை அடித்து விரட்டினார். காரணம் செங்கலடி பிரதேச செயலக பிரிவில் ஈராக்குளம் புலுட்டுமானோடை எனும் கிராமத்தில் பௌத்த விகாரை அமைக்க முயற்சித்ததற்காகவே அந்த சம்பவம் நடந்தது. அது வரலாறாகப் பதியப்பட்டுள்ளது. ஆனால் இன்று அதே இடத்தில் பௌத்த மத பீடம் நிறுவுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அபிவிருத்தி நாயகர்களே உங்கள் அபிவிருத்தி பௌத்த மத அபிவிருத்தி என்பதனை மக்கள் இப்போது தான் உணர தலைப்பட்டுள்ளனர். உங்கள் காலத்திலே இவைகள் அமைக்கப்பட்டதாக வரலாறு இருக்கும். அபிவிருத்தி மகான்களே உங்கள் எண்ணம் உங்களை கொல்லவில்லையா? செங்கலடி ஈரளக்குளம் புளுட்டுமானோடை 400 ஏக்கர் விவகாரத்தில் கட்சி பேதமின்றி தமிழர்களின் பூர்விகம் எனும் தொனியில் ஓரணியில் ஒன்று திரள அனைவரையும் அழைக்கின்றோம்.

கொரோனா தொற்றுக்கும், கேன்சர் தேங்காய் எண்ணைக்கும், உச்சம் தொட்ட விலைவாசிக்கும், உரிமை நசுக்கப்படும் ஆட்சிக்கும், சுட்டெரிக்கும் வெயிலுக்கும் மத்தியில் மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சமூர்த்தி பணத்திலும் தமது வீட்டுப் பணத்தை தாரை வார்ப்பதுபோல் படம் காட்டும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையில் சிக்குண்டு சீரியும் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

தேவையற்ற விடயங்களை தூக்கி பிடிக்கும் முகநூல் தோழர்களே! நீங்களுமா மரத்துப் போனீர்கள்? முள்ளந்தண்டு முறிந்து போன மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளும், அடக்கி வாசிக்கும் ஊடகங்களும் ஏன் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பௌத்த மத்தியஸ்தானம் வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments: