News Just In

12/01/2020 04:28:00 PM

மட்டக்களப்பு மாநகரசபை பகுதியில் சூறாவளி தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்!!



கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தென் கிழக்காக உருவாகியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாற்றமடைந்து கிழக்கு ஊடாக கடந்துசெல்லும் நிலையேற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாலை ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனின் அழைப்பின் பேரில் மாநகர அனர்த்த முகாமைத்துவ நிலையியற் குழுவின் தலைவர் த.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு வழங்கும் தீர்மானங்களுக்கு அமைவாக பொதுமக்களுக்கு அது தொடர்பில் தெளிவூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மாநகர சபையின் முழுமையான பங்களிப்பினை வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

புரவி சூறாவளி மட்டக்கள்பபு மாநகரத்தினை தாக்கும்பட்சத்தில் மாநகரசபையின் முன்னாயத்த படையணி மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு தயாராகயிருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மேலும் பதவி நிலை உத்தியோகத்தர்களின் விடுமுறைகளை ரத்து செய்வதோடு, 24 மணி நேரமும் தயார் நிலையில் இருத்தலுடன் அனர்த்த ஆபயக் குறைப்பு பணிகளில் ஈடுபடும் வகையில் மாநகர தீயணைப்பு படையணியை முழுமையாக பயன்படுத்துவதோடு மாநகரத்துக்குள் காணப்படும் ஆபத்தான மரங்களை இனம் கண்டு உடனடியாக அகற்றுத்தல் போன்ற தீர்மானங்களும் இதன்போது எட்டப்பட்டன.










No comments: