News Just In

8/16/2026 05:37:00 AM

வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படவுள்ள மிக ஆபத்தான நபர்கள்.. பதற்றத்தில் பல அரசியல்வாதிகள்!

வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்படவுள்ள மிக ஆபத்தான நபர்கள்.. பதற்றத்தில் பல அரசியல்வாதிகள்!



வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக் குழுவினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

கண்டியில் நேற்று  (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
கலக்கத்தில் பலர்..

நாட்டில் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்கு சர்வதேச நாடுகளிலிருந்தும் வெளிநாட்டுத் தூதரகங்களிலிருந்தும் பலத்த ஆதரவும் பாராட்டும் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சோதனைகளை நிறுத்துமாறு தனக்கு எந்தவித வெளிப்புற அழுத்தங்களோ அச்சுறுத்தல்களோ வரவில்லை என்றும், மேலதிக சோதனைகளை நடத்துமாறு கோரிக்கைகளே கிடைக்கப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் முதலீடு செய்து ஆதரவளித்தவர்கள் தற்போது கடும் கலக்கத்தில் இருப்பதை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் சிலர் தனக்கு எதிராக வெளியிடும் அறிக்கைகள் குறித்துத் தனக்கு எந்தப் பயமும் இல்லை என்றும், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார்.

தான் எந்தவொரு சமூக அநீதியையோ அல்லது அழிவையோ ஏற்படுத்தாததால், சிறப்புப் பாதுகாப்பு இல்லாமலும் கூட நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குத் தன்னால் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மக்களிடையே செல்ல முடியாத நிலை தனக்கு இல்லை என்றும், பொய்களைக் கூறி சமூகத்தை அழித்த அரசியல்வாதிகளுக்கே அந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.

மேலும் 73 பேரைச் சிவப்பு எச்சரிக்கை மூலம் நாட்டிற்கு அழைத்துவர வேண்டி உள்ளதாகவும், சர்வதேச ரீதியில் நல்ல ஒத்துழைப்பு கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: