News Just In

8/25/2026 06:29:00 AM

சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்க புதிய திட்டம்: காவல்துறை ஆலோசனை பெற முடிவு

சிறைச்சாலை நெருக்கடியைக் குறைக்க புதிய திட்டம்: காவல்துறை ஆலோசனை பெற முடிவு!


சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைப்பதற்காகக் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் காவல்துறையின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையிலான குழுவின் கூட்டத்தில் இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வது முதல் வழக்குத் தாக்கல் செய்வது வரையிலான காவல்துறையின் நடைமுறைகள் குறித்தும், அதில் காணப்படும் சட்டத் தடைகளை நீக்குவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதம் மற்றும் அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெறுவதில் உள்ள தாமதம் காரணமாகவே விளக்கமறியலில் வைக்கப்படும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குற்றவாளிகளைக் கைது செய்வது மட்டுமன்றி, போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்கள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களால் நடத்தப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கத் தகுந்த ஒழுங்குமுறை விதிகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டங்களைப் பலப்படுத்துதல் மற்றும் குற்றத் தடுப்பில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுகளை விரைவுபடுத்தக் காவல்துறையின்கீழ் நவீன தடயவியல் ஆய்வகம் ஒன்றை அமைப்பது குறித்துக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

விஞ்ஞான சான்றுகளை விரைவாக பகுப்பாய்வு செய்வது நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்திச் சிறை நெருக்கடியைக் குறைக்க உதவும்.

இந்தநிலையில், காவல்துறை அதிகாரிகளின் நலனை மேம்படுத்துதல், அவர்களின் தொழில்முறைப் பயிற்சி மற்றும் புலனாய்வுத் திறன்களை அதிகரித்தல், செயல்முறை மதிப்பீட்டு முறைகளைப் பலப்படுத்துதல் என்பன தொடர்பிலும் நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.

No comments: