திருகோணமலை- கிளிவெட்டி, குமாரபுரம் பகுதியில் 1996 ஆம் ஆண்டு தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கு தொடர்பில், முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் அறுவரை விடுவித்து அநுராதபுரம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்த வழக்கை மீண்டும் விசாரணையிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, 24 தமிழ் பொதுமக்களைப் படுகொலை செய்தமை மற்றும் 25 பேருக்குக் காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 101 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த அறுவருக்கும் எதிராக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
எனினும், 2016 ஆம் ஆண்டு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் இவர்கள் அனைவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்தது.
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன், இதுகுறித்த தகவலை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் பணித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய நீதியசர்கள் ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், இரு நீதியரசர்களும் தனித்தனியாகத் தீர்ப்புரைகளை எழுதியுள்ளனர்.
சந்தேகநபர்களை அடையாளம் காட்டும் அணிவகுப்பின் போது பதிவு செய்யப்பட்ட சில பதிவுகளைச் சான்றுகளாகக் குறியீடு செய்ய அரசத் தரப்புக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்காதமை ஒரு தவறு என மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா முன்வைத்த வாதத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நீதியரசர் அமல் ரணராஜா தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில்; அடையாள அணிவகுப்பு தொடர்பான ஆவணங்களில் உத்தியோகபூர்வ கையொப்பம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, விசாரணையின் போது அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதிக்காததன் மூலம் மேல் நீதிமன்ற நீதிபதி ஒரு தொழில்நுட்பத் தவறைச் செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நீதியரசர் சுமுது பிரேமச்சந்திர தனது தீர்ப்புரையில்; அடையாள அணிவகுப்பு ஆவணங்களில் உத்தியோகபூர்வ கையொப்பமும் திகதியும் இல்லாமையைக் தீர்மானிக்கும் காரணியாக மேல் நீதிமன்ற நீதிபதி எடுத்துக்கொண்டமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதா மற்றும் அதனை மதிப்பிட முடியுமா என்பதிலேயே நீதிபதி கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: