News Just In

7/19/2026 06:01:00 PM

இலங்கை புலனாய்வாளர்களுக்கு முதன் முறையாக கிடைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம்!

இலங்கை புலனாய்வாளர்களுக்கு முதன் முறையாக கிடைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம்




1994ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தையின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது சரியான தோற்றத்துடனான புகைப்படத்தை முதன் முதலில் நாங்கள் பார்த்தோம் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

ஒரு இராணுவத் தளபதியாக பிரபாகரனை முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், எனது கையால் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. எனது பணி அதுவல்ல. இராணுவத் தளபதியின் பணி ஒருவரது தலையில் துப்பாக்கியால் சுடுவது அல்ல.

எனினும், எமது இளவயதில் இப்படியொரு நிலை இருந்திருந்தால் ஒருவேளை அந்த எண்ணம் எனக்குத் தோன்றியிருக்கலாம்.

அத்துடன், ஆரம்பக் காலத்தில் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகத் தான் வாழ்ந்தார்கள். எனவே அவர்களை நேருக்கு நேர் சந்திக்கும், மோதும் சந்தர்ப்பங்கள் இருந்ததில்லை.

1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையின் போதுதான், பிரபாகரனின் உண்மையான புகைப்படம் கூட புலனாய்வாளர்களுக்கு கிடைத்தது.

அதுவரை பிரபாகரனின் தோற்றம் தொடர்பான தெளிவான ஒரு புகைப்படமும் எங்களிடம் இருந்ததில்லை.

1994ஆம் கிடைத்த புகைப்படத்திற்கு முதல், பிரபாகரனின் சாதாரண தரப் பரீட்சைக்கான அடையாள அட்டையில் இருந்த ஒரு புகைப்படம் தான் புலனாய்வாளர்களிடம் இருந்தது.

அதன்பிறகு, பிரபாகரன் இந்தியாவில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு தெளிவான புகைப்படத்தைத் தான் நாங்கள் முதன் முதலில் பார்த்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: