News Just In

6/14/2026 10:30:00 AM

சாய்ந்தமருது ஜனாஸா அமைப்பினருக்கான படகு ஓட்டும் பயிற்சி முகாம் ஆரம்பம்!

சாய்ந்தமருது ஜனாஸா அமைப்பினருக்கான படகு ஓட்டும் பயிற்சி முகாம் ஆரம்பம்

நூருல் ஹுதா உமர்

வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது அவசர நிலைமைகளை திறம்பட கையாளும் நோக்கில் சாய்ந்தமருது ஜனாஸா அமைப்பின் உறுப்பினர்களுக்கான படகு ஓட்டும் பயிற்சி முகாம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் கல்முனை கிடங்கிப் பாலம் அண்மித்த பகுதியில் நடைபெற்று வரும் இப்பயிற்சி முகாமில் ஜனாஸா அமைப்பின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்று பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

அனர்த்த காலங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்பது, அவசர உதவிகளை விரைவாக வழங்குவது, படகுகளை பாதுகாப்பாக இயக்குவது மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பான நடைமுறைப் பயிற்சிகள் இதில் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி நிகழ்வு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஏ.எம். றியாஸ் தலைமையில் இடம்பெற்று வருவதுடன், பயிற்றுவிப்பாளர்கள் மூலம் செயல்முறை அடிப்படையிலான விளக்கங்களும் வழங்கப்படுகின்றன.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சமூகத்திற்கு உடனடி உதவிகளை வழங்கக்கூடிய தன்னார்வத் தொண்டர்களை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளில் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் பணிகளில் இப்பயிற்சி பெரிதும் உதவியாக அமையும் எனவும், சமூக சேவையை மேம்படுத்தும் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது

No comments: