அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் உரை மேடை (Podium) என்பன இன்று கல்லூரி அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் நிதி மற்றும் கணக்காய்வு கிளை செயலாளர் எல். முஹம்மட் நிப்றாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், அமைப்பின் தவிசாளரும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான நூருல் ஹுதா உமர் அவர்கள் அன்பளிப்புகளை வழங்கி வைத்தார்.
இதன்போது கல்லூரியின் உதவி அதிபர், ஒழுக்காற்றுக் குழு பொறுப்பாசிரியர், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கல்லூரிக்கு வழங்கப்பட்ட உரை மேடை, ஒலிவாங்கித் தாங்கி மற்றும் ஒலிவாங்கிகள் ஆகியவை பாடசாலையின் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஏ. முகமது நௌசாத் அவர்கள், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் இந்த தாராளமான பங்களிப்பு கல்லூரியின் கூட்டங்கள், ஒன்றுகூடல்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதாரமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறந்த தகவல் தொடர்பு மற்றும் கல்விச் சூழலை உருவாக்க இவ்வசதிகள் உதவும் என்றும், கல்வி மேம்பாட்டின் மீது அமைப்பு காட்டிவரும் அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சமூக நலப்பணிகள் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதுடன், மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வசதிகளை வழங்கும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments: