கல்முனை கடற்கரைப் பகுதியில் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் முன்னாள் கடலரிப்பைத் தடுக்கும் நோக்கில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இடப்பட்டிருந்த பாறாங்கற்கள் அகற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கரையோரம் பேணல் மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் மறுத்துள்ளது.
தகவலறியும் உரிமைச் சட்டம் இல. 12 of 2016 இன் கீழ் கல்முனையைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் எம்.எஸ்.பௌசர் முன்வைத்த தகவல் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள கிழக்கு மாகாண கரையோரம் பேணல் மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையின் பிராந்திய பொறியியலாளர் எம். துளசிதாசன், குறித்த பாறாங்கற்கள் அகற்றப்படவில்லை என்றும், நடைபாதை அல்லது அழகுபடுத்தல் வேலைத்திட்டங்களுக்காக அவை மாற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் (நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப்) முன்பகுதியில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னர் இடப்பட்டிருந்த மெட்ரிக் தொன் கணக்கான பாறாங்கற்கள் அகற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கு “இல்லை” என பதிலளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பாறாங்கற்கள் நடைபாதை அல்லது அழகுபடுத்தல் திட்டங்களுக்காக அகற்றப்பட்டனவா என்ற கேள்விக்கும் திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கல்முனை பகுதியில் தற்போது அதிகரித்து வரும் கடலரிப்பிற்கான முக்கிய காரணமாக 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒலுவில் துறைமுக நிர்மாணம் அமைந்துள்ளதாக திணைக்களம் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தகவல்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ பதிலில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்ட பொய் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுள்ளது
No comments: