
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி முறிந்த நிலையில், மக்களவையில் திமுகவுக்கான இருக்கைகளை மாற்றி வழங்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகருக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை அளித்திருக்கிறது. நீண்ட காலம் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் இப்போது தவெகவுடன் கைகோத்துள்ளது.
இந்நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்களவை சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய நிலையில், மக்களவையில் திமுக எம்.பி.க்களுக்கு அருகே காங்கிரஸ் அமரும் இருக்கையை மாற்றம் செய்ய வேண்டும். தற்போதைய இருக்கை அமைப்பில் காங்கிரஸுடன் இணைந்து அமருவது பொருத்தமாக இருக்காது.
மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் தங்களது பொறுப்புகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில், தனியான இருக்கை வசதியை ஒதுக்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments: