
தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏ.,க்கள் உள்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்கள் தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா தொடங்கியது. விஜய் முதல்வராக பதவியேற்றபோதும் கூட முதலில் வந்தே மாதரம் பின்னர் தேசிய கீதம் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து என்று இசைக்கப்பட்டு அதற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியிலும் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வராக கடந்த மே.9-ம் தேதி விஜய் பதவியேற்றார். அன்றையதினம் அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் பதவியேற்றனர். சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கான இலாகாகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று அமைச்சர்களாக, 1. ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ, 2. எஸ்.கமலி - அவிநாசி, 3. சி.விஜயலக்ஷமி - குமாரபாளையம், 4. ஆர்.வி.ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம், 5. வினோத் - கும்பகோணம், 6. ராஜீவி - திருவாடானை, 7. பி.ராஜ்குமார் - கடலூர், 8. வி.காந்திராஜ் - அரக்கோணம், 9. மதன்ராஜ்.பி - ஒட்டப்பிடாரம், 10. ஜெகதீஸ்வரி.கே - ராஜபாளையம், 11. ராஜேஷ்குமார்.எஸ் - கிள்ளியூர், 12. விஜய்பாலாஜி.எம் - ஈரோடு கிழக்கு, 13. லோகேஷ் தமிழ்செல்வன்.டி - ராசிபுரம், 14. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ - சேலம் தெற்கு, 15. ரமேஷ் - ஸ்ரீரங்கம், 16. பி.விஸ்வநாதன் - மேலூர், 17. குமார்.ஆர் - வேளச்சேரி, 18. தென்னரசு.கே - ஸ்ரீபெரும்புதூர், 19. சம்பத்குமார்.வி - கோவை வடக்கு, 20. முகமது ஃபர்வாஸ்.ஜே - அறந்தாங்கி, 21. டி,சரத்குமார் - தாம்பரம், 22. மரிய வில்சன் - ராதாகிருஷ்ணன் நகர், 23. விக்னேஷ்.கே - கிணத்துக்கடவு ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இத்துடன் தமிழக அமைச்சரவையில் பலம் 33 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து தவெகவுக்கு ஆதரவு கொடுத்த 25 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கினால் ஆதரவை பரிசீலனை செய்வோம் என்று இடதுசாரிகள் எச்சரித்திருந்த நிலையில் அவர்களுக்கு இடம் தரப்படவில்லை.
59 ஆண்டுகளுக்குப் பிறகு: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ.க்களான செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக அரசியலில் 59 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரம் பெற்றுள்ளது. இது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இது குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. ”தமிழகத்தை தவிர நாங்கள் கூட்டணியில் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் ஆட்சியில் பங்கு கொள்வோம். ஆனால், இங்கு மட்டுமே மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்டுவிட்டு வெளியில் இருப்போம். தமிழக அமைச்சரவை விரிவாக்கம், எங்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்துள்ளது. இது தமிழகத்தில் எங்களின் ஆதிக்கத்தை மீட்டெடுக்க உதவும். தமிழக மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் எங்கள் கட்சியினரும், அமைச்சர்களும் செயல்படுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சிக்கு வரும் முன்னரே தன்னுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று பிரச்சாரம் செய்தது நினைவுகூரத்தக்கது.
மேலும் தமிழக அமைச்சரவையில் 4 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments: