News Just In

5/16/2026 09:00:00 AM

மட்டக்களப்பில் 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: கடத்தல்காரர்கள் கைது

மட்டக்களப்பில் 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல்: கடத்தல்காரர்கள் கைது


மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்ற முச்சக்கரவண்டியை வீதியில் வைத்து பெற்றோர் மடக்கி பிடித்ததையடுத்து கடத்தல் காரன் முச்சக்கரவண்டியை விட்டு விட்டு தப்பி ஓடியதுடன் மயக்கமடைந்த சிறுமியை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் முச்சக்கரவண்டியை மீட்க சென்ற கடத்தலுடன் தொடர்புடைய ஒருவரை மடக்கி பிடித்த சம்பவம் நேற்றுமுன்தினம்  (14) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த சிறுமியை அவரது தந்தையார் ஆங்கில பாடத்திற்கு தனியார் கல்வி நிலையத்துக்கு சம்பவ தினமான நேற்று இரவு காரில் கொண்டு சென்ற நிலையில் அங்கு மழை காரணமாக வகுப்பு நடைபெறாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் நகரில் பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகிலுள்ள சிறிய ஒழுங்கையில் உள்ள அவர்களது சிறிய தாயாரின் வீட்டில் கொண்டு சென்று தந்தையார் விட்டுவிட்டு அவர் கடைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறிய தாயார் சிறுமி வரவில்லை என சிறுமியின் தந்தைக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்ததையடுத்து அவர் ”நான் தான் கொண்டு வந்து விட்டுவிட்டு போனான்” என தெரிவித்து விட்டு உடனடியாக காரில் அங்கு சென்றுள்ள நிலையில் அங்கு ஒரு முச்சக்கரவண்டி அவரை கண்டதும் பின்னோக்கி சென்று அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து அவர் அந்த முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்து ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் மடக்கி பிடித்தார்.

இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த இளைஞன் முச்சக்கரவண்டியை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ள நிலையில் முச்சக்கரவண்டியின் பின் பகுதியில் மயக்கமடைந்த நிலையில் சிறுமி கிடப்பதை கண்டு அவரை அருகிலுள்ள மட்டு. போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி இடத்துக்கு சென்று பொலிஸாருக்கு தெரியப்படுத்திய நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அங்கு சென்ற இளைஞன் முச்சக்கரவண்டி உரிமையாளர் எனது நண்பன், முச்சக்கரவண்டியை எடுத்து கொண்டு போகப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறுமியின் தந்தையார் இது பிரச்சசினை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தபோது குறித்த இளைஞன் பொலிஸ் உயர் அதிகாரி எனக்கு தெரியும் போன் எடுத்தால் உடன் காலடிக்கு வருவார் என தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அந்த இளைஞனை மடக்கி பிடித்து நையப்புடைப்பு செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியை மீட்டதுடன் தப்பி ஓடி தலைமறைவாகியிருந்த கடத்தல்காரனை இரவு 11.00 மணிக்கு கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரன் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் திருமணம் முடித்துள்ளதாகவும் கடத்தல்காரனுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் இருதயபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் 15 வயது 16 வயது சிறுமிகளை குறிவைத்து அவர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து காதலிப்பதாக நாடகமாடி அவர்களுக்கு தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் இளைஞர் குழு ஒன்று இவ்வாறு செயற்பட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர்களை விசாரணை பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: