நூருல் ஹுதா உமர்
இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) பொதுமக்களுக்கு ஆபத்தானதாக அமையக்கூடும். இது சம்பந்தமாக பாராளுமன்றத்திலும் பல விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த சட்டம் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த அரசாங்கம் இந்த சட்டத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மின்சார கட்டண அதிகரிப்பு மக்கள் மீது கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது என்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற சபை அமர்வில் உரையாற்றிய அவர், “பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்ற விசேட சட்டங்களில் தெளிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம். இல்லையெனில், அது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது,” மேலும், கடந்த காலங்களில் அதிக இலாபமீட்டும் சபையாக இயங்கும் இலங்கை மின்சார சபை (CEB) மின்சார கட்டணத்தை அதிகரிக்க முனைவது ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள மக்களுக்கு கடும் சுமையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இன்றைய பொருளாதார சூழலில் மக்கள் வாழ்க்கைச் செலவினை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் மின்கட்டண உயர்வு சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது,” எனவும் அவர் தெரிவித்தார். அத்தியாவசிய சேவைகளின் கட்டண உயர்வுகள் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை முன்னிருப்பில் வைத்து தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தவிசாளர் வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் வழமைபோன்று நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.
No comments: