மண்ணுக்கு பெருமை சேர்த்த முத்துக்களை பாராட்டி கௌரவித்த பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயம்
நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய மருதமுனை- பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் சாதனையாளர்களை கௌரவிக்கும் சிறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் பாடசாலை அதிபர் ஏ.எச். அலி அக்பர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (United Nations High Commissioner for Refugees (UNHCR)) ஆப்கானிஸ்தான் பிராந்திய உதவி பிரதிநிதியாக பணியாற்றி வரும் எம்.ஐ.எம். சுபைர் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்தி பிரதி பணிப்பாளர் திருமதி எம்.எச். ரியாசா அவர்கள் பங்கேற்றார்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சஃப்ரின் சலாஹுதீன், கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் காது–மூக்கு–தொண்டை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ. முஹம்மது அசீம், பாடசாலையின் நிறுவனர் அல்-ஹாஜ். வை.எல்.எம். அன்சார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கிழக்கு மாகாண மூத்த சமூக திருத்த அலுவலர் எம்.எஸ். முகம்மது சஃப்ரீன் மற்றும் பாடசாலையின் EPSI ஒருங்கிணைப்பாளர் ஏ.ஜி.எம். ஜுலோல் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் நினைவுப் பரிசுகளால் கௌரவிக்கப்பட்டனர். அதிதிகள் தங்களது உரைகளில், மாணவர்களின் விடாமுயற்சி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பே இச்சாதனையின் அடிப்படை எனக் குறிப்பிட்டு, எதிர்காலத்திலும் கல்வி துறையில் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்க மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழாவை மேலும் சிறப்பித்தது. இவ்விழா பாடசாலை சமூகத்தினரிடையே உற்சாகத்தையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியதாக காணப்பட்டது.
No comments: