News Just In

8/21/2025 05:10:00 PM

மட்டக்களப்பில் சினிமா பாணியில் நடந்த கடத்தல்

மட்டக்களப்பில் சினிமா பாணியில் நடந்த கடத்தல்



மட்டக்களப்பில் சினிமா பாணியில் நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து கடத்தி சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் (19) காலையில் நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

மாவட்டத்தில் பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். அவ்வாறே காதலன் அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சில காலங்களுக்கு பின்னர் இந்த பதிவு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பெற்றோருக்கு தெரிய வந்துள்ள நிலையில் குறித்த காதலன் வெளிநாடு சென்றுள்ளார்.

அதன் பின்னர் வெளிநாடு சென்ற காதலன் பல தீய பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக காதலிக்கு தெரியவந்ததையடுத்து அவருடன் வாழ முடியாது என விவாகரத்து கோரி மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து வெளிநாடு சென்றுள்ள காதலனுக்கு பதிலாக அவரது சகோதரியார் நீதிமன்றில் முன்னிலையாகி வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து காதலன் திரும்ப நாட்டுக்கு வந்து வழக்கிற்கு நீதிமன்றில் முன்னிலையாகி 3 தவணைக்கு சென்று வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ தினமான நேற்றுமுன்தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு காதலி அவரது சகோதரி மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். அதேவேளை நீதிமன்ற பகுதியில் இருவர்களின் உறவினர்களும் வெளியில் காத்திருந்த போது நீதிமன்றத்துக்குள் காதலியும் காதலனும் சென்று வழக்கு விசாரணையின் பின்னர் அங்கிருந்து திருப்பி வெளியே வந்துள்ளனர்.



வீதிக்கு வரும் போது அங்கு வைத்து காதலியை காதலனின் சகோதரி திடீரென அவரின் வாயை பிடித்து பொத்திக் கொண்டார்.

இதன்போது காதலன் அவளை இழுத்து சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அங்கிருந்த காதலியின் உறவினர் ஒருவர் உடனடியாக ஆட்டோ மீது பாய்ந்து அவரை காப்பாற்ற முற்பட்ட போது ஆட்டோ அவரை சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்று அங்கு தள்ளி விட்டுவிட்டுசினிமா பாணியில் குறித்த காதலியை காதலன் அவரது சகோதரியும் கடத்தி சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட பெண்ணின் சகோதரி மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: