News Just In

7/23/2025 11:53:00 AM

ரணிலின் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


ரணிலின் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



2022ஆம் ஆண்டு போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சற்று முன்னர் இது தொடர்பான தீர்ப்பு உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2 ஆவது விதிமுறையின் கீழ் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

அதற்கு எதிராக சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்து இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், பதில் ஜனாதிபதி என்ற வகையில் ரணில் அவசர காலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகோட ஆகியோர் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 02ம் பிரிவின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க அவசர காலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியமை பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளித்துள்ளனர்.

எனினும் நீதியரசர் அர்ஜுன அபேசேகர தனது தீர்ப்பில், அவசர காலச் சட்டம் காரணமாக அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை என்று தீர்ப்பளித்துள்ளார்.

தனடிப்படையில் பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்ப்பின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

No comments: