தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேலும் இரண்டு அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்பொழுது 23 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த எண்ணிக்கையை 25 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அல்லது பிரதி அமைச்சர் முனிர் முலாபருக்கு ராஜாங்க அமைச்சர் அல்லது அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இறுதித் தீர்மானம் இல்லை..
பாதுகாப்புதுறை சார்பான அமைச்சர்களில் ஒருவருக்கு வேறும் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் புதிய ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் மேடைகளில் அளித்த வாக்குறுதிக்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 ஆக பேணுவதற்கு இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஆளும் தரப்பில் அதிகாரபூர்வமாக இதுவரையில் அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
No comments: